Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

பாடகன் மேஜர் சிட்டு

தமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் பங்கும் தாக்கமும் மிகப்பெரியது. “புலிகள் பாடல்கள்” என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்றி இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு உருவான பாடல்களே அதிகம். டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, சொர்ணலதா, வாணி ஜெயராம் என்று திரையிசையிற் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களின் குரல்களில் அப்போதைய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.

இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்திலேயே பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுடன் முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டே அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்நேரத்தில் சிறந்தவொரு பாடகன் எங்களுக்குக் கிடைத்தான். மேஜர் செங்கதிர் என்ற போராளிக் கவிஞனின் வரிகள் பாடலாக உருப்பெற்றபோது இப்போராளிப் பாடகன் அறிமுகமானான். “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற பாடலே இப்போர்ப்பாடகனின் முதலாவது அரங்கேற்றம். அதன்பின் களத்தில் சாகும்வரை சுமார் 75 பாடல்கள் வரை பாடியுள்ளான் சிட்டு எனும் இப்போராளிப் பாடகன்.

விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்புக்களிலும் அரசியல்துறையின் பொறுப்புக்களிலும் தனது போராட்டப் பணியைச் செய்து வந்தான். கேணல் கிட்டு அவர்களுக்காக ‘சிட்டு’ பாடிய “கடலம்மா” பாடல் மிகுந்த பிரபலம். சிட்டுவின் குரல் யாரையும் கட்டிப்போட வல்லது. பின் ‘உயிர்ப்பூ’ திரைப்படத்தில் சிட்டு பாடிய
சின்னச் சின்னக் கண்ணில் – வந்து மின்னல் விளையாடிடும்’
என்ற பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியாது. வெளியிடப்படும் எந்த ஒலிநாடாக்களை எடுத்தாலும் அதில் சிட்டுவின் பாடல் இருக்கும்.

ஜெயசிக்குறு தொடங்கியபின் வன்னியில் கடும் சண்டை மூண்டது. வெற்றி தோல்வி எதுவும் தெரியாமல், எப்போது முடியுமென யாராலும் சொல்ல முடியாமல் நீண்டது சண்டை. அச்சமர் தொடங்கியதிலிருந்து சமர்க்களத்திற் பணியாற்றினான் சிட்டு. இறுதியில் ஆவணி முதலாம் திகதி ஓமந்தை இராணுவத்தளத்தின் மீது புலிகளின் திட்டமிட்ட அதிரடித் தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான் எங்கள் பாடகன் மேஜர் சிட்டு

உலகில் மிக மோசமான அளவில் ஆட்கடத்தல்களைச் செய்யும் அமைப்பாகியுள்ளது இலங்கை அரசு என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

2006ல் உள்நாட்டுப் போர் மீண்டும் தொடங்கியதிலிருந்து பாதுகாப்புப் படையினரும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களுமாக நூற்றுக்கணக்கானோரைக் கடத்தியுள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

இலங்கையில் நடக்கும் ஆட்கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையை ஒரு தேசிய நெருக்கடி என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வருணித்துள்ளது.

முக்கியமாக தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடிக்கடி கடத்தப்படுகிறார்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இவர்களின் கடத்தலுக்கு பெரும்பான்மைக் காரணமாக அமைந்துள்ளது.

கடத்தப்பட்டவர்களில் பலர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று அஞ்சப்படுகிறது. ஆட்கடத்தலுக்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அரசு கிஞ்சித்தும் உறுதியாக இல்லை என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

இலங்கையில் நடந்த படுகொலைகள் உள்ளிட்ட பாரிய அளவிலான 16 மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட தேசிய விசாரணைக் குழுவின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக, சர்வதேச முக்கியஸ்தர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழு, தனது பணியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்திருக்கிறது.

Action contre la faim என்ற பிரஞ்சு தொண்டு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொல்லப்பட்டது, பள்ளிப் படிப்பு நிறைவடைந்ததை கொண்டாடிக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்கள் திருகோணமலையில் கொல்லப்பட்டது போன்ற பெரிய அளவிலான கொலைச் சம்பவங்களை, இலங்கை ஜனாதிபதி நியமித்த தேசிய விசாரணைக் ஆணையம் எவ்வாறு விசாரிக்கிறது என்று மேற்பார்வையிட வேண்டியது இந்த சர்வதேச மேற்பார்வைக் குழுவினரின் பணியாகும்.

தமது கண்காணிப்புப் பணிகளுக்கு இலங்கை அரச அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் என்றும், அரசின் விசாரணை முறைகளில் குறைகள் பல இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் இக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரிட்டிஷ் பிரதிநிதி சர் நைஜல் ரோட்லி குறிப்பிட்டிருக்கிறார்

படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் (வயது 51) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து சிவநேசன் திரும்பிக்கொண்டிருந்த போது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இக்கிளைமோர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மாங்குளத்திற்கு தெற்காக 2 கிலோமீற்றர் தொலைவிலும் ஓமந்தையில் இருந்து 25 கிலோ மீற்றர் தொலைவிலும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
இத்தாக்குதலில் சிவநேசன் மற்றும் அவரது ஓட்டுநரான ஒரு பிள்ளையின் தந்தையான வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த பெரியண்ணன் மகேஸ்வரராஜா (வயது 27) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இராஜயோகம் செய்தால் மனதை ஒரு நிலைப்படுத்தி வளமான வாழ்வுக்கு அடித்தளம் இடமுடியும்.
 இவ்வாறு பதுளை பிரமகுமாரிகள் இல்லத்தின் பிரமகுமாரி லோகா தெரிவித்தார்.
பிரமகுமாரிகள் இல்லத்தின் பதுளைக் கிளை நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி செவ்வி ஒன்றினை அளிக்கும்போதே பிரமகுமாரி லோகா மேற்கண்ட விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
அவர் தெரிவித்த மேலும் கருத்துகள் வருமாறு:
கேள்வி: முதலில் பிரமகுமாரிகள் இராஜயோக நிலையத்தைப் பற்றிக் கூறுங்கள்?
பதில்: சமய, சாதி, மத பேதமின்றி நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் 800 இற்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களுடன் 8 1/2 லட்சத்துக்கு மேற்பட்ட இராஜயோகிகளுடன் இந்திய ராஜஸ்தான் அபுமலையில் தனது தலைமை யகத்தைக் கொண்டு இயங்குகிறது பிரமகுமாரிகள் இராஜயோக நிலையம்
இலங்கையில் சேவாலங்கா நிகழ்ச்சித் திட்டத்தினூடாக 20 இற்கும் மேற்பட்ட துணை நிலையங்களைக் கொண்டுள்ளது.  இற்றைக்கு 72 ஆண்டுகளுக்கு மேலாக எமது பிரமகுமாரிகள் இராஜயோக நிலையத்தினூடாக பல சேவைகளைச் செய்து வருகின்றோம்.
கே: இராஜயோகம் என்றால் என்ன?
ப: மிக மேலானதும் இலகுவானதுமான தியான முறையாகும். இப்பயிற்சியில் கண்களைத் திறந்துகொண்டு நாம் எமது மனதை ஒரு நிலைப் படுத்துகின்றோம்.  இதன் மூலம் இணக்க மனப்பாங்கையும், சமநிலையையும், அமைதியையும் எய்த முடியும்.
கே: இதனைச் செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் எவை?
ப :  வயது வேறுபாடின்றி அனைவரும் இந்த இராஜயோகத்தைச் செய்ய முடியும்.  இதன் மூலம் புலன்களைக் கட்டுப்படுத்தி மனதை ஒரு நிலைப்படுத்துவதனால் இரத்த ஓட்டவேகமும், சுவாச வேகமும் அமைதியடைகின்றன. 
இதனால் எமக்கு ஏற்படும் பாரிய நோய்களாகிய குருதி அமுக்கம், சிறுநீரகப் பிரச்சினை, மாரடைப்பு போன்றவற்றை முற்றாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியரினால் திகதி குறிக்கப்பட்டபோதும் அதிலிருந்து மீண்டும், நீண்டதொரு காலத்திற்கு அவர்களால் வாழமுடியும் என்பதை உறுதியுடன் கூறமுடியும். 
இதற்கு அவர்களுடைய விடா முயற்சிதான் அவசியம்.  இந்த இராஜயோகப் பயிற்சியின் மூலம் வைத்தியர்களால் கைவிடப்பட்டவர்கள்  இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும், நிலையான அமைதி உணர்வு, மன ஒருமைப்பாடு, மனத்தெளிவு, நேசமான உறவுமுறைகள், ஆரோக்கியமும் உற்சாகமும், மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு, தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுதல், ஞாபகசக்தி, மனதை அலைபாயவிடாதிருத்தல் போன்ற நன்மைகளைப் பெறமுடியும்.
கே: இராஜயோகத்தை எவ்வாறு பயிலமுடியும்.
ப: ஏழு நாட்களுக்கு தினசரி ஒரு மணிநேரம் எம்மால் வழங்கப்படும் இலவசப் பாடநெறியே இராஜயோகத் தியானத்தைப் பயில்வதற்கான சிறந்ததும் இலகுவானதுமான முறையாகும்.
கே: இராஜயோகம் செய்கின்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள் எவை?
ப: இவர்கள் உண்ணும் உணவு தூய்மையாக இருக்க வேண்டும்.  குறிப்பாக, தாவர உணவு சிறந்தது.  தினமும் பயிற்சி செய்ய வேண்டும்.
கே:  தியானத்திற்கும் யோகாசனத்திற்குமிடையிலான வேறுபாடு என்ன?
ப: தியானம் என்பது மனோ சக்திக்காகச் செய்யப்படுவது. ஆத்மாவில் தான் மனம், யுக்தி, சமஸ்காரங்கள் இருக்கின்றன. அதனால் இதனை அடுத்த பிறவிக்கும் நாம் கொண்டு செல்கிறோம்.
யோகாசனமென்பது உடம்பின் சக்திக்காகச் செய்யப்படுவது. அதாவது, உடம்பிலிருக்கும் தேவையற்ற சதைகளைக் குறைத்து மூட்டுக்களை வலிமைபெறச் செய்கிறது.
கே: இதனை ஓர் ஆற்றுப்படுத்தல்  செயற்பாடு எனவும் கொள்ள முடியுமா?
ப: ஆம். இன்று ஒவ்வொருவரும் பல்வேறான பிரச்சினைகளுக்கும் நெருக்கீடுகளுக்கும் மிகப் பாரதூரமாக முகம் கொடுத்து வருகின்றார்கள். இதனால் இவர்கள் உளவியல் ரீதியாக மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இது விரக்தி, பிடிப்பின்மை, சோர்வு, ஆர்வமின்மை, முயற்சியின்மை போன்ற பல்வேறான தாக்கங்களை ஏற்படுத்தும்.
எனவே, இவ்வாறானவர்களுக்கும் ஆற்றுப்படுத்துகையென்பது மிகவும் அவசியமானது. எமது நிலையத்தால் நடத்தப்படும் இராஜயோக தியானமானது ஒரு சிறந்த நிவாரணி என்பதை உறுதிபடச் சொல்லமுடியும். எனவே, இதுவும் ஓர் ஆற்றுப்படுத்துகை என்பதற்கு மாற்றுக்கருத்துக் கிடையாது.
கே: இராஜயோகத்தைப் பற்றி வேறு என்ன கூறவிரும்புகின்றீர்கள்?
ப: சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ்பவர்களும் சந்தோஷமான, நிம்மதியான வாழ்க்கையை இதன்மூலம் வாழமுடியும். இதிலிருந்து நான் யார்? நான் யாருடைய குழந்தை? நான் எங்கிருந்து வந்தேன்? இனி எங்கே போகப்போகின்றேன்? என்பதையும் உணரச்செய்ய முடியும், இந்தப் பயிற்சியின் மூலம் ஞாபகசக்தியை அதிகரிக்க முடியும். இதில் ஒழுக்க நெறிகள், பண்புகள், தெய்வீகக் குணங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இன்று பல்வேறு அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன. அந்தச் சந்தர்ப்பத்தில் எம்மைக் காக்கும்  சக்திதான் தெய்வீகசக்தி. இந்தத் தெய்வீகசக்தியை இப்பயிற்சியின் மூலம் நாம் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் வெளிப் புலன்களையும், உட்புலன்களாகிய மனம், புத்தி, இரண்டையும் கட்டுப்படுத்துவதன் மூலம் ஓர் பூரணத்துவத்தை அடையமுடிகிறது. 
மனதளவில் இன்று பாதிக்கப்பட்டுக் கண்ணீரோடு தமது வாழ்க்கையை வெறுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இதன்மூலம், “எனக்கும் என் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ முடியும்’ என்ற எண்ணத்தையும், நம்பிக்கையையும் உருவாக்க முடியும்.
 இவ்வாறு விளக்கம் தந்தார் பதுளை பிரமகுமாரின் இல்லத்தின் பிரமகுமாரி லோகா.  

வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் நான்காம் கட்டை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது புதன்கிழமை காலை நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பொலிசார் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுப் போக்குவரத்தின்றி மூடப்பட்டுள்ள இந்த வீதியில் இடம்பெற்றுள்ள இந்த கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் காரணமாக இப்பிரதேசத்தில் காலையில் பெரும் பதற்றம் நிலவியது

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான மோதல்களில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் இலங்கைப் படையினரும் மற்றும் பொலிஸாருமாக 104 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தவிர 822 பாதுகாப்புப் படையினர் இந்த மோதல்களில் காயங்களுக்கு உள்ளானதாக, புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில், அவசரகால நிலையை நீடிப்பதற்கான சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய இலங்கை அமைச்சரும், அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

படையினரின் இழப்புக்கு அப்பால், இந்த ஒரு மாத கால மோதல்களில் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் வடமேற்கே பாடல் பெற்ற தலமாகிய திருக்கேதீஸ்வரத்தில் இந்துக்களின் முக்கிய விழாவாகிய சிவராத்திரியை, அந்த ஆலயத்தில் இரவு தங்கியிருந்து கொண்டாடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பக்தர்களுக்கு இராணுவம் அனுமதி வழங்கியிருப்பதாக அந்த ஆலயத்தின் திருப்பணிச்சபையினர் தெரிவித்துள்ளனர்.

சிவராத்திரியை முன்னிட்டு 6ஆம் 7ஆம் திகதிகளில் திருக்கேதீஸ்வரத்திற்குப் பகல் வேளையில் பக்தர்கள் சென்று வரலாம் என்றும், அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் இராணுவ அதிகாரிகளும், மன்னார் மாவட்ட அரச அதிகாரிகளும் தெரிவித்திருப்பதாக ஆலயத் திருப்பணிச் சபையின் செயலாளராகிய புலவர் அம்பலவாணர் திருநாவுக்கரசு கூறுகின்றார்.

திருக்கேதீஸ்வரத்திற்கு அப்பால் அமைந்துள்ள இராணுவத்தின் முன்னரங்க பகுதிகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அண்மைக் காலமாகத் தொடரும் மோதல்களில் எழும் வெடிச் சத்தங்கள் ஆலயம் வரையில் கேட்பதாகவும், எனினும் ஆலயச் சூழலில் உள்ளவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும் திருநாவுக்கரசு தெரிவித்திருக்கின்றார்.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரத்தில் நாளாந்த பூஜை வழிபாடுகள் கிரமமாக நடைபெற்று வருகின்ற போதிலும், ஆலயத்திற்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையான பக்தர்களே காலையில் வந்து பிற்பகல் 4.30 மணிக்கு திரும்பிவிட வேண்டிய பாதுகாப்பு நடைமுறை படையினரால் கடைப்பிடிக்கப்படுவதாகவும் ஆலயத் திருப்பணிச் சபையைச் சேர்ந்த திருநாவுக்கரசு கூறியிருக்கின்றார்.

மோதல்களின் போது உயிரிழந்த 03 பெண் புலிகளின் சடலங்களை படையினர் நேற்று 6.30 மணியளவில் மன்னார் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

அடம்பன் பகுதியில் இடம் பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த புலிகளின் சடலங்களையே தாம் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது .

இச்சடலங்களை இன்று மதியம் 1.30 மணியளவில் மன்னார் வட்ட நீதிவான் டி.ஜே. பிரபாகரன் வைத்திய சாலையில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் பிரதே பரிசோதனையின் பின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் “இரு இந்தியத் தலைவர்களும் விடுதலைப்புலிகளும்” . “விடுதலை” எனும் இரண்டு நூல்களின் அறிமுகவிழா இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் மாலை நடைபெற்றது

பழைய பதிவுகள் »